இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்
இறைவி :அருள்மிகு பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி, வண்டமர் பூங்குழலியம்மை அம்மன்
தல மரம் :வன்னி மரம்
தீர்த்தம் :ஆதிசேஷ தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பாம்புரம், தல வரலாறு.
பிரார்த்தனை:
போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 600 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய_பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம். இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை. ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை. இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில் ஒரு பஞ்சலிங்க தலமாகும். சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.
தல வரலாறு
ஒரு முறை விநாயகர், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் சர்வேஸ்வரை தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அங்கு தியான நிலையில் இருந்த, தன் தந்தையான ஈசனை வணங்கினார். அப்போது சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பானது, விநாயகப்பெருமான் தன்னையும் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. உலகின் இயக்கங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு உயிரின் செயல்களையும் கண்காணித்து வரும் சிவபெருமானுக்கு, தன் கழுத்தில் இருக்கும் நாகத்தின் எண்ணத்தை கணிக்க முடியாமல் போய்விடுமா என்ன?. நாகத்தின் எண்ணத்தை அறிந்த ஈசன், நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்கும்படி சாபமிட்டார். இதனால் உலகில் உள்ள அனைத்து நாகங்களும் தங்கள் வலிமையை இழந்தன. அதன் காரணமாக உலக உயிர்கள் பலவற்றாலும், நாகங்களுக்கு துன்பங்கள் நேர்ந்தன. இதையடுத்து அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களையும் தண்டிக்க வேண்டாம் என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும் படியும் அனைவரும் ஈசனை வேண்டி நின்றனர். ‘மகா சிவராத்திரி அன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் சென்று என்னை தரிசித்து வேண்டினால் சாபவிமோசனம் பெறலாம்’ என்று சிவபெருமான் வழிகாட்டி அருளினார். அதன்படியே ஆதிசேஷன் தலைமையில் அஷ்டநாகங்களும் திருப்பாம்புரம் சென்று ஈசனை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது. இத்தலத்திற்கு மற்றொரு தல வரலாறும் கூறப்படுகிறது. (அதனையும் இங்கே பார்க்கலாம்.) முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது. இதனால் வாயு பகவான் தன் வலிமையால், பெரிய பெரிய மலைகளை எல்லாம் புரட்டிப் போட்டது. ஆதிசேஷனோ அந்த மலைகளை தன் வலிமையால் தடுத்து நிறுத்தியது. இருவரும் சமபலத்துடன் இருந்த காரணத்தால், வெற்றித் தோல்வி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயு பகவான், ஏனைய உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்து, மடியும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து தேவர்களின் வேண்டுகோள் படி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. மேலும் உலக உயிர்கள் துன்பப்பட தானும் ஒரு காரணமாக இருந்ததால், திருப்பாம்புரம் சென்ற ஆதிசேஷன், அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து தன்னுடைய தவறை பொருத்தருளும் படி இறைவனை வேண்டியது.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம், குடவாசல் வட்டம். திருவாரூர் மாவட்டம் – 612 203.
திருக்கோயில் திறக்கும் நேரம்:
ஞாயிறு மற்றும் செவ்வாய் மாலை 2.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை, புதன்கிழமை ராகு, கேது பூஜை பகல் 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, வியாழகிழமை ராகு, கேது பூஜை பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை.
அமைவிடம்:
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்